search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம போத ஆகாதே படத்தின் விமர்சனம்"

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் விமர்சனம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti
    நாயகன் அதர்வாவும், நாயகி மிஷ்டியும் பிரிந்துவிடுகின்றனர். மிஷ்டியை பிரிந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் அதர்வாவை தேற்ற முயற்சி செய்யும் அவரது நண்பன் கருணாகரன், மிஷ்டியை மறப்பதற்காக அதர்வாவை மற்றொரு பெண்ணுடன் கோர்த்து விடுகிறார். முதலில் அதற்கு ஆர்வம் காட்டாத அதர்வா பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார். 

    இதையடுத்து விலைமாதுவான அனைகா சோதியை, அதர்வா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் கருணாகரன். இந்த நிலையில், அதர்வாவுக்கு மிஷ்டி போன் செய்து தான் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வருவதாகவும், இருவரும் சேர்வது குறித்து பேச தனது மாமாவும் தன்னுடன் வருவார் என்றும் கூறுகிறாள். மிஷ்டி வருவதற்குள் அனைகாவை வெளியே அனுப்பி விட அதர்வா முடிவு செய்கிறார். 



    இந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருக்கும் தேவதர்ஷினி தனது மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று அதர்வாவின் உதவியை கேட்கிறார். இதையடுத்து அனைகாவை தனது வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு அதர்வா மருத்துவமனைக்கு செல்கிறார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது, அனைகா வாயில் இரத்தத்துடன் செத்துக் கிடக்க அதிர்ச்சியடையும் அதர்வா கருணாகரனுக்கு போன் செய்கிறார்.

    இந்த நிலையில், அனைகாவுக்கு போன் வர அதை எடுத்து பேசும் போது, அனைகா கேரளாவை சேர்ந்தவள் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து மிஷ்டிக்கு போன் செய்து அவளை இன்னொரு நாள் வரும்படியும், அனைகாவின் உடலுக்கு துணையாக கருணாகரனையும் வைத்து விட்டு, அனைகாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க அதர்வா கேரளா செல்கிறார். 



    அங்கு அவருக்கு நிறைய இடைஞ்சல்கள் வருகிறது. அதையெல்லாம் முறியடித்து அனைகா மரணத்தில் இருக்கும் மர்மத்தை அதர்வா கண்டுபிடித்தாரா? மிஷ்டியுடன் மீண்டும் இணைந்தாரா? அனைகா உடலுக்கு காவலுக்கு இருந்த கருணாகரன் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பானா காத்தாடி படத்திற்கு பிறகு மீண்டும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள அதர்வா, இந்த படத்தில் முற்றுலும் மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக கருணாகரனும் காமெடியில் கலக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கருணாகரனின் காமெடிக்கு சிரிப்பொலி கேட்கிறது. 



    மிஷ்டிக்கு தமிழில் இது தான் முதல் படம் என்றாலும், மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருப்பதுடன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனைகா சோதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் முக்கிய திருப்பமாக அவரது கதாபாத்திரம் பார்க்கப்படுகிறது. ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

    பானா காத்தாடி படத்திற்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். காதல், காமெடி, கிளுகிளுப்பு, கவர்ச்சி, த்ரில்லர் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார். எனினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம்.



    யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில் தனது பழைய ஃபார்முடன் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `செம போத ஆகாதே' மயக்கம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti

    ×